ஆசனூர் அருகே சோதனைச் சாவடியில் வாகனங்களை வழிமறித்த யானையால் பரபரப்பு

சத்தியமங்கலம்:  சத்தியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் தமிழக-கர்நாடக  எல்லையில் உள்ள காரப்பள்ளம் சோதனைச் சாவடியில் காட்டு யானைகள் வாகனங்களை  வழிமறித்து நின்றதால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர். சத்தியமங்கலம்  புலிகள் காப்பகம் ஆசனூர் வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள்  வசிக்கின்றன. இந்த காட்டு யானைகள் அவ்வப்போது வனப்பகுதி வழியாக அமைந்துள்ள  சத்தியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் நடனமாடுவது வழக்கம்.  இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஒரு பெண் யானை தனது குட்டியுடன் பகல்  மற்றும் இரவு நேரங்களில் சாலையோர வனப் பகுதியில் சுற்றித் திரிகிறது.  இந்த நிலையில் நேற்று அதிகாலை வனப்பகுதியை விட்டு வெளியேறிய காட்டுயானை தனது குட்டியுடன்  சத்தியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களை பற்றி  கவலைப்படாமல் ஜாலியாக நடந்து சென்று ஆசனூர் அருகே உள்ள காரப்பள்ளம் வன  சோதனைச் சாவடியில் தனது குட்டியுடன் வாகனங்களை வழிமறித்து நின்றது.

இதனால் சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் யானையைக் கண்டு அஞ்சி வாகனங்களை நிறுத்தினர்.  பெண் யானை தனது குட்டியுடன் சாலையில் சிதறி விழுந்த கரும்புத் துண்டுகளை  தின்றபடி சுமார் அரை மணி நேரம்  நகராமல் நின்றதால் வாகனங்கள் செல்ல  முடியாமல் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. அரை மணி நேரம் நின்ற காட்டு  யானை பின்னர் தனது குட்டியை அழைத்துக்கொண்டு வனப்பகுதிக்குள் சென்றபின்  வாகனங்கள் புறப்பட்டு சென்றன. குட்டியுடன் நடமாடும் காட்டு யானையால்  சத்தியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு  ஏற்படுவது தொடர்கதையாக உள்ளது.

Related Stories: