தமிழக விவசாயிகள் டெல்லியில் பேரணி

புதுடெல்லி: ஒன்றிய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து, டெல்லி எல்லைகளை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். தற்போது, அவர்களுக்கு டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தினமும் வந்து போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு ஒவ்வொரு மாநில விவசாயிகளும் சென்று ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். நேற்று அகில இந்திய விவசாயிகள் சங்கம், தமிழக கரும்பு விவசாயிகள், தமிழக விவசாயிகள் சங்கம் என பல்வேறு விவசாய சங்கங்களை சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட விவசாயிகள் ரயில் மூலம் டெல்லி சென்றனர். அவர்களை போலீசார் டெல்லி நகர வீதிக்குள் செல்ல விடாமல் தடுத்தனர்.

விவசாயிகளும் டெல்லி ரயில் நிலைய வளாகத்தில் சிறிது தூரம் பேரணி நடத்திய பின்னர் அங்கேயே அமர்ந்து ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இதில், மதுரை மக்களவை உறுப்பினர் வெங்கடேசன், கோவை மக்களவை உறுப்பினர் பி.ஆர் நடராஜன்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ரயில் நிலையத்தில் இருந்து சிறிது தூரம் பேரணியாக சென்ற விவசாயிகளை போலீசார் வேன்களில் ஏற்றிச் சென்று சிங்கு எல்லையில் விட்டனர்.

Related Stories: