செல்போன் ஒட்டு கேட்பு விவகாரம் தீவிரமான விஷயம்தான்: உச்ச நீதிமன்றம் கருத்து

புதுடெல்லி: ‘பெகாசஸ் மென்பொருள் மூலமாக செல்போன்கள் ஒட்டு கேட்கப்பட்டதாக பத்திரிகைகளில் வெளியான செய்தி சரியாக இருக்கும் பட்சத்தில், அது மிகவும் தீவிரமான விஷயம்தான்,’ என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.இஸ்ரேலின் பெகாசஸ் ஒட்டுக்கேட்பு செயலி மூலம் இந்தியாவில் அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட 300 பேரின் செல்போன் எண்கள் ஒட்டுக் கேட்கப்பட்டது தொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்பி.யான ஜான் பிரிட்டாஸ், மூத்த பத்திரிகையாளர், வழக்கறிஞர்கள், தி எடிட்டர்ஸ் கில்ட் ஆப் இந்தியா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதில், இந்த ஒட்டு கேட்பு விவகாரத்தை தற்போது பதவியில் இருக்கும் நீதிபதி அல்லது ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியை நியமித்து, உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்’ என்று கோரப்பட்டுள்ளது. இந்த மனு தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் மூ்த்த வழக்கறிஞர் கபில்சிபல் வாதிட்டார்.

வாதத்தின் விவரம் வருமாறு:தலைமை நீதிபதி என்.வி.ரமணா: பத்திரிகைகளில் வெளியான செய்திகளின் அடிப்படையில் இந்த வழக்குகள் தொடரப்பட்டு இருப்பதால், முதலில் பத்திரிகை செய்திகளின் உண்மை தன்மை குறித்து ஆராய வேண்டியுள்ளது. அதன் பிறகுதான் இந்த விசாரணையை நடத்த முடியும். கடந்த 2019ம் ஆண்டு இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்ததாக கூறப்படும் நிலையில், இப்போது இந்த விவகாரத்தை மிக அவசரமாக கையாள வேண்டிய சூழல் என்ன இருக்கிறது? உளவு பார்க்கப்பட்டதாக சொல்பவர்கள் யாரும் இதுவரை புகார் அளிக்கவில்லை? ஊடகங்களில் வரும் செய்திகள் சரியாக இருந்தால், இந்த குற்றச்சாட்டுகள் தீவிரமானவைதான்.கபில் சிபல்: இதற்கு என்னால் பதில் அளிக்க முடியும்.

நீதிபதி சூர்யகாந்த்: சிபிஐ.யிடம் புகார் அளித்துவிட்டு மறுநாளே மனு தாக்கல் செய்தீர்களா?இதர மனுதாரர் வக்கீல்கள்: இந்த விஷயத்தில் ஒன்றிய அரசு பதிலளிக்க வேண்டும். தகவல் தொடர்பு விஷயங்கள் எங்களிடம் ஏதும் இல்லை. அரசாங்கத்திடம் மட்டுமே விபரங்கள் இருப்பதால், நாங்களே எல்லா பதில்களையும் கொடுக்க முடியாது. ஒருமுறை செல்போனில் ஊடுருவி ஒட்டுக் கேட்பதற்கு, சுமார் 55,000 டாலர்கள் கொடுக்கப்படுதாக என்னிடம் தகவல்கள் உள்ளன. இவ்விஷயத்தில் எப்ஐஆர் கூட பதிவு செய்யவில்லை. ஒன்றிய அரசு ஏன் அமைதியாக இருக்கிறது?. இவ்விவகாரம் நாட்டு மக்களின்தனியுரிமை மற்றும் பாதுகாப்பு பற்றியது.என்எஸ்ஓ நிறுவனம் உளவு பார்க்க கூடிய தொழில்நுட்பங்களை, நம்பகமான அரசுகளுக்கு மட்டுமே வழங்கும். அப்படி இருக்கும் பொழுது ஒன்றிய அரசு இதை விலை கொடுத்து வாங்கியதா? அல்லது இதில் நேரடியாக சம்பந்தப்பட்ட இருக்கிறதா? என்பதை அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும்.

உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள் பலரது செல்போன்கள் உளவு பார்க்கப்பட்டதாக கூறப்படும் தகவல் இன்று காலை தான் வெளியாகியிருக்கிறது.வழக்கறிஞர் ராகேஷ் திவேதி: குறைந்தது 40 பத்திரிகையாளர்களில் ஏழு செல்போன்கள் தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அதில், 5 பேரின் தகவல்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக ‘தி வயர்’ இணைய தளம் உறுதிப்படுத்தியது. 155 பேரின் செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்பட்டது தொடர்பான பட்டியலை சமர்பித்துள்ளோம். தீவிரவாதிகளின் போன்களை ஒட்டுக் கேட்பதை என்னால் புரிந்து கொள்ளப்படுகிறது. ஆனால், சாதாரண மக்களின் எண்களை ஒட்டுக் கேட்பதை ஏற்க முடியாது.தலைமை நீதிபதி ரமணா: ஒன்றிய அரசிடம் மனுவின் நகல் கொடுக்கப்பட்டதா?வழக்கறிஞர் ஷ்யாம் திவான்: நாங்கள் அதை சொலிசிட்டர் மற்றும் அட்டர்னி ஜெனரலிடம் கொடுத்துள்ளோம்.

தலைமை நீதிபதி ரமணா: அனைத்து தரப்பினரும், தங்களின் மனுக்களை ஒன்றிய அரசிடம் கொடுக்க வேண்டும். இவ்வழக்கு, வரும் 10ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.இவ்வாறு விவாதம் நடந்தது.

Related Stories: