சரிவர சாப்பாடு தராததால் மருமகள் கழுத்தை அறுத்த மாமனார்

கடையம்: தென்காசி அருகே சரிவர சாப்பாடு தராததால் மருமகள் கழுத்தை அறுத்த மாமனாரை போலீசார் கைது செய்தனர். தென்காசி மாவட்டம் கீழக்கடையம் குமரேசபுரம் காலனியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (74). இவரது மனைவி இறந்து விட்டார். செந்தில்குமார் என்ற மகனும், புவனேஷ்வரி என்ற மகளும் உள்ளனர். இதில் புவனேஸ்வரிக்கு திருமணமாகி மருதம்புத்தூரில் வசித்து வருகிறார். செந்தில்குமார் இறந்து ஆறு வருடங்கள் ஆகின்றன. இந்நிலையில் செந்தில் குமாரின் மனைவி ஷா (43) தனது நான்கு குழந்தைகளுடன் மாமனார் சுப்பிரமணியன் வீட்டில் வசித்து வருகிறார். கூலி வேலைக்கு சென்று ஷா, தனது குழந்தைகளையும் மாமனாரையும் கவனித்து வந்தார்.

இந்நிலையில் தனக்கு சரிவர சாப்பாடு தரவில்லை எனக்கூறி சுப்பிரமணியம் அடிக்கடி ஷாவிடம் தகராறு செய்து வந்துள்ளார். ேநற்றும் வழக்கம் போல் சாப்பாடு தொடர்பாக மாமனாருக்கும், மருமகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சுப்பிரமணியன் முகசவரம் செய்யும் கத்தியால் ஷா கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்றுள்ளார்.  ரத்தம் சொட்ட சொட்ட துடிதுடித்த ஷாவை அப்பகுதி மக்கள் மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின்பேரில், கடையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி சுப்பிரமணியனை கைது செய்து செய்தனர்.

Related Stories: