திருவள்ளூர்: ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் ரூ.2 கோடி வரையில் மோசடி செய்ததாக சகோதரர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவான 3 பேரை தேடி வருகின்றனர். பள்ளிப்பட்டு அருகே பொம்மராஜிபேட்டை கிராமத்தை சேர்ந்தவர் சத்தியராஜ்(29). இவரது நண்பர்கள் கண்ணாபிரான், முருகன், பாலாஜி, சீனிவாசன். இவர்கள் படித்து விட்டு வேலையில்லாமல் இருந்தனர். இதனால் வேலைகேட்டு அதே பகுதியை சேர்ந்த புஷ்பராஜ், வெங்கடேசன், பாலாஜி, அரவிந்த், ராகுல் ஆகியோரை அனுகியுள்ளனர். அப்போது, அவர்கள் தங்களுக்கு ரயில்வேதுறையில் உயர் அதிகாரிகளை தெரியும் எனக் கூறி, ரயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக அவர்களிடம் தெரிவித்துள்ளனர். இதை நம்பிய வாலிபர்கள் தலா ரூ.2.50 லட்சம் கொடுத்துள்ளனர். இதையடுத்து வாலிபர்கள் நம்பும் வகையில் நியமன ஆணை மற்றும் அடையாள அட்டைகளை வழங்கினர்.