வீடுகள், குடியிருப்புகளின் கூரைகளில் சூரிய சக்தி மின்சார வசதி ஏற்படுத்துவதற்கு 40% வரை மானியம் : மத்திய அரசு தகவல்

டெல்லி : வீட்டின் கூரைகளில் சூரிய சக்தி மின்சார வசதி ஏற்படுத்துவதற்கு வழங்கப்படும் மானியம் குறித்து நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் அறிவித்துள்ளார்.

ஊரகப் பகுதிகள் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு இடங்களில் கூரைகள் மீது சூரிய சக்தியை நிறுவும் நடவடிக்கையை ஊக்குவிப்பதற்காக, கூரைகள் மீது நிறுவப்படும் சூரிய சக்தித் திட்டத்தை (பகுதி II) மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் அமல்படுத்துகிறது. இதற்காக, 2022-ஆம் ஆண்டிற்குள் 4000 மெகாவாட் திறன் கொண்ட கூரைகள் மீதான சூரிய சக்தியை குடியிருப்பு துறையில் மானியத்துடன் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை, மத்திய எரிசக்தி மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் ஆர் கே சிங், நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் நேற்று தெரிவித்தார்.

தனி வீடுகளின் கூரைகளில் 3 கிலோ வாட் வரை சூரிய சக்தியை நிறுவுவதற்கு 40% வரை மானியம் வழங்கப்படும். 3 முதல் 10 கிலோ வாட் திறன் கொண்ட சூரிய சக்தி கருவிகளை நிறுவுவதற்கு 20% மானியம் அளிக்கப்படும். குடியிருப்பு நல்வாழ்வு சங்கங்கள்/ குழு வீடுகளின் சங்கங்களுக்கு பொதுவான மின்சார வசதிகளுக்கு பயன்படுத்துவதற்காக நிறுவப்படும் 500 கிலோ வாட் திறன் கொண்ட சூரிய சக்தி உபகரணங்களுக்கு 20% மானியம் வழங்கப்படும்.தொகுப்பில் இணைக்கப்பட்ட கூரைகள் மீதான சூரிய சக்தி அமைப்புமுறைகளின் ஒட்டுமொத்த ஊக்குவிப்பிற்காக இந்த மாபெரும் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது.

Related Stories: