70 விமானங்களுடன் புதிய விமான நிறுவனம் ஜுன்ஜுன்வாலா அறிவிப்பு

புதுடெல்லி: ‘இந்தியாவின் வாரன் பப்பெட்’ என்று  அழைக்கப்படுபவர்  ராகேஷ் ஜுன்ஜுன்வாலா, இந்திய பங்கு சந்தைகளில் முதலீடு செய்பவர்களில் மிகவும் பிரபலமானவர். ‘ஆப்டெக் லிமிடெட் கணினி’ மையத்தின் நிறுவனராகவும், பல பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் இயக்குனர் குழுவிலும் பங்கு வகிக்கிறார். இந்திய பங்குச் சந்தையில் இவருடைய முதலீட்டின் மதிப்பு ரூ. 18 ஆயிரம் கோடிக்கு மேல் உள்ளது. இவருடைய சொத்து மதிப்பு ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து வருகிறது. தற்போது, இந்தியாவில் உள்ள மிகப்பெரிய பணக்காரர்களின் வரிசையில் இவர் 54வது இடத்தில் இருக்கிறார்.

விமானப் போக்குவரத்து துறையில் கொடி கட்டி பறந்த கிங்பிஷ்ஷர், ஜெட் ஏர்வேஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் நஷ்டத்தால் துவண்டு, மூடப்பட்டுள்ளன. இண்டிகோ ஏர்வேஸ், விஸ்தாரா உள்ளிட்ட சில விமான நிறுவனங்களே தற்போது வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றன. இவையும் கொரோனா ஊரடங்கால் தள்ளாட்டத்தில் உள்ளன. இந்த கடினமான சூழ்நிலையில், 70 விமானங்களுடன் புதிய விமான போக்குவரத்து நிறுவனத்தை தொடங்கப் போவதாக ஜுன்ஜுன்வாலா அறிவித்துள்ளார். 180 பயணிகள் அமரும் வசதிகள் கூடிய விமானங்களை குறைந்த கட்டணத்தில் அவர் இயக்க திட்டமிட்டு உள்ளார். தனது விமான நிறுவனத்துக்கு அவர், ‘ஆகாசா ஏர்’ என்ற பெயரிட்டுள்ளார். இந்த விமான நிறுவனத்துக்கான அனுமதி, இன்னும் 15 நாட்களில் கிடைத்து விடும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: