ஆபாச படம் எடுத்த விவகாரம் ஷில்பா ஷெட்டியிடம் போலீஸ் விசாரணை: ராஜ் குந்த்ரா போலீஸ் காவல் 27 வரை நீட்டிப்பு

மும்பை: ஆபாச பட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவை, வரும் 27ம் தேதி வரை போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. ஷில்பா ஷெட்டியிடமும் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். பிரபல நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரான பிரிட்டிஷ் - இந்திய தொழிலதிபர் ராஜ் குந்த்ரா, ஆபாச படங்களை உருவாக்கி அதனை மொபைல் செயலிகள் மூலம் வெளியிட்ட புகாரின் பேரில் மும்பை காவல் துறையால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்த வழக்கில் கைதான ராஜ் குந்த்ராவிடம் போலீஸ் காவலில் விசாரிக்க நேற்று வரை நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது. விசாரணை முடிந்து மாஜிஸ்திரேட் கோர்ட்டில் அவர் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். அவரிடம் வரும் 27ம் தேதி வரை விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில், ராஜ் குந்த்ராவுடன், ஜூகுவில் உள்ள ஷில்பா ஷெட்டி வீட்டுக்கு சென்ற போலீசார், அங்கு நேற்று பல மணி நேரம் சோதனை நடத்தினர். நடிகை ஷில்பாவிடமும் விசாரணை நடத்தியதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. இது பாலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மவுனம் கலைந்தார்

தனது கணவர் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்த ஷில்பா ஷெட்டி, இன்ஸ்டாகிராமில், ஒரு புத்தகத்தின் வரிகளை புகைப்படமாக எடுத்து அதனை மேற்கோளாக காட்டி பதிவிட்டுள்ளார். அந்த புத்தகத்தில், ‘எங்களைத் துன்புறுத்தியவர்களால் ஏற்பட்ட ஏமாற்றங்கள், அனுபவித்த துரதிர்ஷ்டங்கள் ஆகியவற்றை கோபத்துடன் திரும்பிப் பார்க்க வேண்டாம். இதனால் ஏதாவது நோய் ஏற்படலாம் அல்லது மரணத்தை கூட அனுபவிக்கலாம். நாம் இருக்க வேண்டிய இடம் இங்கே இருக்கிறது.

என்ன நடந்தது அல்லது என்ன நடக்கிறது என்பது பற்றி அறிய ஆர்வம் இல்லை. ஆனால், என்னவென்பது முழுமையாக அறிய முடிகிறது. நான் உயிருடன் இருப்பதால், அதிர்ஷ்டசாலி என்பதை உணர்கிறேன். இதையறிந்து ஆழ்ந்து மூச்சு விடுகிறேன். கடந்த காலங்களில் நான் சவால்களை எதிர்கொண்டேன். எதிர்காலத்திலும் சவால்களை எதிர்கொள்வேன்,’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: