புதுச்சேரி: புதுச்சேரியில் சுருக்கு வலை பயன்பாட்டிற்கு தடை விதிக்கக்கோரி 18 கிராம மீனவர்கள் கடந்த 19ம்தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் விசைப்படகு, பைபர், எப்.ஆர்.பி., படகு மற்றும் கட்டுமர உரிமையாளர்கள் நேற்று காலை அவசர கூட்டம் நடத்தினர். வீராம்பட்டினம் கடற்கரையில் நடந்த இக்கூட்டத்தில் 18 கிராம மீனவர்கள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபடுவதென முடிவெடுத்தனர். அதன்படி புதுச்சேரியில் காந்திசிலை எதிரே கடலில் படகுகளுடன் நின்று கருப்புக் கொடியை ஏந்தியவாறு மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 150க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், பைபர் படகுகள், எப்ஆர்பி, கட்டுமர படகுகளுடன் 250க்கும் மேற்பட்ட உரிமையாளர்கள், மீனவர்கள் அங்கு நின்றபடி போராட்டம் நடத்தினர்.