பூதாகரமாகும் பெகாசஸ் விவகாரம்!: சிபிஐ முன்னாள் இயக்குநர் அலோக் வர்மா, அனில் அம்பானி, தலாய் லாமாவின் செல்போன்கள் ஒட்டுக்கேட்பு?

டெல்லி: பெகாசஸ் உளவு மென்பொருளை பயன்படுத்தி உளவு பார்க்கப்பட்டவர்களில் பட்டியலில் சிபிஐ முன்னாள் இயக்குநர் அலோக் வர்மா, அனில் அம்பானி, தலாய் லாமா உள்ளிட்டோரும் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேலை சேர்ந்த தனியார் நிறுவனத்தின் பெகாசஸ் உளவு மென்பொருள் விவகாரம் பூதாகரமாகியுள்ளது. உலக தலைவர்கள் உட்பட 50 ஆயிரத்திற்கும் அதன் மூலம் உளவு பார்க்கப்பட்டதாக ஆய்வறிக்கை கூறுகிறது. இந்தியாவில் பத்திரிகையாளர்கள் உட்பட 300 பேர் பெயர் அப்பட்டியலில் உள்ளதாக கூறப்படுகிறது. ரபேல் ஊழல் குற்றச்சாட்டு வெடித்த 2018ம் ஆண்டு தொழிலதிபர் அனில் அம்பானியின் செல்போன் ஒட்டுகேட்கப்பட்டதாக தற்போது புகார் எழுந்துள்ளது.

அதே ஆண்டில் சிபிஐ இயக்குநராக இருந்த அலோக் வர்மா, சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா இடையே மோதல் போக்கு நிலவியபோது அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் செல்போன்கள் ஒட்டுக்கேட்பட்டதாக கூறப்படுகிறது. அந்த பட்டியலில் திபெக் மதகுரு தலாய் லாமாவின் ஆதரவாளர்கள் மற்றும் ஆலோசகர்களின் செல்போன் எண்களும் இடம்பெற்றிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் ஒன்றிய அரசை கடுமையாக சாடிவரும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, வரும் 26ம் தேதி பிரதமரை சந்திக்க உள்ளார். அப்போது இதுகுறித்து அவர் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: