புதுடெல்லி: உத்தரப்பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் நடந்த விழாவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பங்கேற்று பேசுகையில், ‘‘இந்தியாவில் உள்ள அனைத்து மக்களின் மரபணுவும் ஒன்றுதான். இந்தியாவில் முஸ்லிம்கள் தங்கக்கூடாது என்று ஒருவர் வெறுப்புடன் கூறினால், வெறுப்பைக் காட்டினால் அவர் நிச்சயம் இந்துவாக இருக்க முடியாது. சிலர் பசு காவலர்கள் என்ற பெயரில் அப்பாவிகள் மீது தாக்குதல் நடத்துகிறார்கள் இது இந்துத்துவாவிற்கு எதிரானது’’ என்றார், பகவத்தின் இந்த பேச்சுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் அசாசுதீன் ஒவைசி தனது டிவிட்டர் பதிவில், ‘கலவரம் செய்வது, கொலை செய்வது போன்றவை தான் கோட்ஸே இந்துத்துவா சிந்தனை. இதன் விளைவாக தான் முஸ்லிம்கள் அடித்துக் கொல்லப்படும் சம்பவங்களும் நடைபெறுகின்றன. இந்த கிரிமினல்களுக்கு பசுவுக்கும், எருமைக்கும் வித்தியாசம் தெரியவில்லை. ஆனால் ஜூனைத், அக்லக், பெஹ்லு, அக்பர், அலிமுதீன் என்ற பெயர் வைத்திருப்பவர்களை அடித்துக் கொல்ல வேண்டும் என்று மடடும் தெரிகிறது’ என்றார்.