புதுடெல்லி: லட்சத்தீவில் பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டுள்ள நிலையில், அது பற்றி ஆய்வு செய்வதற்காக செல்ல முயன்ற 3 கேரள காங்கிரஸ் எம்பி.க்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. லட்சத்தீவில் ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்ட நிர்வாக அதிகாரி பிரபுல் கோடா பட்டேல் கொண்டு வந்துள்ள பல்வேறு சர்ச்சைக்குரிய சட்டங்களால் பொதுமக்களும், அரசியல் கட்சியினரும் கண்டனங்களை தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவரை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தியும் வருகின்றனர். இது தொடர்பாக, கேரள சட்டப்பேரவையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டு உள்ளது. மேலும், கேரள உயர் நீதிமன்றத்தில் நிர்வாக அதிகாரியை திரும்பப் பெறக்கோரி பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளது.