எலி மருந்து கொடுத்து 2 குழந்தைகளை கொன்று தாயும் தற்கொலை: குடும்ப தகராறில் விபரீதம்

மணப்பாறை: குடும்ப தகராறில் எலி மருந்து கொடுத்து 2 குழந்தைகளை கொன்று விட்டு, தாயும் தற்கொலை செய்து கொண்டார். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள வரதக்கோன்பட்டியை சேர்ந்தவர் முருகேசன்(30). விவசாய கூலி தொழிலாளி. இவரது மனைவி நித்யா(27). இவர்களது மகள் நல்லக்கண்ணு(7), மகன் ரோகித்(4). நல்லக்கண்ணு 2ம் வகுப்பு படித்து வந்தாள். ரோகித் இன்னும் பள்ளியில் சேர்க்கப்படவில்லை. தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்படும். அப்படி சண்டை வரும்போதெல்லாம்  நித்யா, குழந்தைகளுடன் பொன்னம்பலத்தான்பட்டியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று விடுவார்.

பின்னர் கணவர் வந்து சமாதானப்படுத்தி அவர்களை அழைத்து செல்வது வாடிக்கையாக இருந்து வந்தது. சமீப காலமாக அவர் தாய் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். மணப்பாறையில் உள்ள தனியார் பஞ்சாலையில் வேலை செய்து வந்தார். தம்பி ஆறுமுகத்துடன், நித்யா வேலைக்கு செல்வது வழக்கம். இந்நிலையில் சில நாட்களுக்கு  முன் நித்யாவின் மாமியார் இறந்து விட்டார். அவரது இறுதி சடங்கில் குழந்தைகளுடன் கலந்து கொண்ட  நித்யா, பின்னர் கணவர் வீட்டில் இருந்து வந்தார்.

அப்போது மீண்டும் கணவருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த நித்யா, கடந்த 30ம் தேதி தாய் வீட்டுக்கு வந்து விட்டார். அப்போதிருந்தே விரக்தியில் காணப்பட்ட நித்யா மறுநாள்(ஜூலை 1ம் தேதி) காலை மகள், மகனுக்கு எலி மருந்தை கொடுத்து விட்டு தானும் சாப்பிட்டார். பின்னர் குழந்தைகளை வீட்டிலேயே விட்டு விட்டு தம்பியுடன் மில்லுக்கு வேலைக்கு சென்றுவிட்டார். பகல் 11 மணி அளவில் தம்பியிடம், குழந்தைகளுக்கு எலி மருந்து கொடுத்து தானும் சாப்பிட்டதாக கூறினார்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த தம்பி ஆறுமுகம், உடனே நித்யாவை மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். பின்னர் வீட்டுக்கு சென்று பார்த்த போது, நித்யாவின் குழந்தைகள் நல்லக்கண்ணு, ரோகித்  மயங்கி கிடந்தனர். உடனே அவர்களையும் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.  அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் மேல் சிகிச்சைக்காக, 3 பேரும் திருச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று நித்யா இறந்தார்.

தொடர்ந்து  குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் ரோகித் இன்று அதிகாலை 3.30 மணிக்கும், 7.30 மணிக்கு நல்லக்கண்ணுவும் அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து நித்யாவின் தந்தை சாமிக்கண்ணு அளித்த புகாரின் பேரில், மணப்பாறை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்பத்தகராறில் மகன், மகளை எலி மருந்து கொடுத்து  கொன்று விட்டு, தாய் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: