கங்கனா மீது கதை திருட்டு குற்றச்சாட்டு

மும்பை: பாலிவுட் நடிகை கங்கனா ரனவத், வரலாற்றுப் படங்களில் நடிக்க தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகிறார். மணிகர்னிகா என்ற இந்திப் படத்தில் ஜான்சி ராணியாக நடித்தவர், தலைவி படத்தில் ஜெயலலிதாவாக நடித்திருக்கிறார். அடுத்து எமெர்ஜென்சி என்ற படத்தில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியாக நடிக்க இருக்கிறார். இந்நிலையில் மணிகர்னிகாவின் இரண்டாம் பாகத்தில் நடிக்க இருப்பதாகவும், அதை தானே இயக்க இருப்பதாகவும் அறிவித்தார். இதற்கான கதை விவாதத்தில் தற்போது ஈடுபட்டு வருகிறார். இந்த கதை கஜினி முகமது இந்தியா மீது படை எடுத்தபோது அவரை எதிர்த்து போரிட்ட காஷ்மீர் மகாராணி குயின் டிட்டாவின் கதை என்ற தகவல் வெளியாகி உள்ளது.இதை தொடர்ந்து ஆசிஷ் கவுல் என்ற எழுத்தாளர் மற்றும் கதாசிரியர், கங்கனா எனது தி வாரியர் குயின் ஆஃப் காஷ்மீர் என்ற சரித்திர நாவலை திருடி திரைப்படமாக எடுக்க திட்டமிட்டுள்ளார் என்று மும்பை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கங்கனா, ‘அந்த படத்தின் பணியை நாங்கள் இன்னும் தொடங்கவில்லை. என்ன கதை என்று தெரியாமல் அதற்குள் எப்படி ஒருவர் அந்த கதைக்கு சொந்தம் கொண்டாட முடியும்? மேலும் சரித்திரத்திற்கு தனிப்பட்டவர்கள் சொந்தம் கொண்டாட முடியாது’ என்று கூறியிருக்கிறார்.

Related Stories: