சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த கூடுதல் தடுப்பூசிகளை ஒதுக்கும்படி ஒன்றிய அரசிடம் தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், ஜூன் மாத ஒதுக்கீடு முடிந்துவிட்டது, என்று ஒன்றிய அரசு தமிழகத்திற்கு கடந்த 2 தினங்களாக தடுப்பூசிகளை அனுப்பவில்லை. இதனால் தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்நிலையில், ஜூலை மாதம் ஒன்றிய தொகுப்பிலிருந்து 71 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் தமிழகத்திற்கு அனுப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி மகாராஷ்டிரா மாநிலம் புனேவிலிருந்து பெங்களூரு வழியாக நேற்று இரவு 9 மணிக்கு சென்னைக்கு வந்த இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானத்தில், 6 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை பழைய விமான நிலையம் வந்தடைந்தன.