ஜார்கண்டில் 6-ம் வகுப்பு மாணவிக்கு மாம்பழம் மூலம் அதிர்ச்சி கொடுத்த தொழில் அதிபர்

ஜாம்ஷெட்பூர்: ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரை சேர்ந்தவர் துள்சி குமாரி (வயது 11), இவர்  6-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தந்தை ஸ்ரீமல் குமார் சாலையோரத்தில் பழங்களை விற்று வருகிறார். கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படவில்லை. இதையடுத்து ‘ஆன்லைன்’ மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் துள்சி குமாரியிடம் செல்போன் வாங்க வசதி இல்லாததால் அவரால் ஆன்லைனில் படிக்க முடியவில்லை. பெண்ணுக்கு செல்போன் வாங்கி கொடுக்க போதிய வருமானம் குமாரிடம் இல்லை. இது பற்றி தகவல் அறிந்த மும்பையை சேர்ந்த தொழில் அதிபர் அமியா ஹீட்டே ஜாம்ஷெட்பூருக்கு வந்து துள்சியை தேடி கண்டுபிடித்தார்.

அச்சிறுமியிடம் ஒரு மாம்பழத்தை ரூ.10 ஆயிரம் வீதம் 12 மாம்பழங்களை வாங்கினார். பின்னர் துள்சி தந்தையின் வங்கி கணக்குக்கு ரூ.1.2 லட்சத்தை உடனடியாக ஆன்லைன் வழியாக அனுப்பி வைத்துள்ளார். இந்த பணத்தை வைத்து செல்போன் வாங்கி ஆன்லைனில் தொடர்ந்து படிக்க வேண்டும் என துள்சியிடம் தொழிலதிபர் அமியா ஹீட்டே கேட்டுக்கொண்டார். மேலும் ஒரு ஆண்டுக்கான இன்டர்நெட் இணைப்பு கட்டணத்தையும் துள்சிக்கு அமியா ஹீட்டே வழங்கியுள்ளார்.

Related Stories: