குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதே பள்ளிகள் திறப்புக்கான வழி: எய்ம்ஸ் இயக்குநர் தகவல்

டெல்லி: பள்ளிகளை திறப்பதற்கும் குழந்தைகளின் வெளிச் செயல்பாடுகளுக்கும் அவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதே வழியாக அமையும் என்று எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலால் பள்ளிகள் திறப்பில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து, தொலைக்காட்சி மற்றும் இணைய வழியில் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்கிடையே குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்துவது குறித்து எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா தகவல் அளித்துள்ளார்.

குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசியை செலுத்துவது என்பது ஒரு மைல்கல் சாதனையாக இருக்கும். 2 முதல் 18 வயது வரையிலான குழந்தைகளுக்கு பாரத் பயோடெக் நிறுவனத்தின் தடுப்பூசியான கோவாக்சின் தடுப்பூசியின் இரண்டு மற்றும் மூன்றாம் கட்டப் பரிசோதனை முடிவு செப்டம்பர் மாதம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து மத்திய அரசின் ஒப்புதலுக்குப் பிறகு குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது தொடங்கும். எனினும் அதற்கு முன்னர் அமெரிக்காவின் பைசர் தடுப்பூசிக்கு இந்தியாவில் ஒப்புதல் கிடைத்தால் அந்த தடுப்பூசியைக் குழந்தைகளுக்கு செலுத்த வாய்ப்புள்ளது.

இந்திய மருந்து நிறுவனமான சைடஸ் கேடில்லா தயாரித்து வரும் கொரோனா தடுப்பூசியான சைகோவ்-டி விரைவில் சந்தைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தடுப்பூசி அவசர கால ஒப்புதலுக்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு நிறுவனத்திடம் விண்ணப்பம் செய்ய உள்ளது. இதைக் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என இரு தரப்புக்கும் செலுத்தலாம். சைகோவிக்-டி தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டால் அதுவும் குழந்தைகளுக்குக் கிடைக்க வாய்ப்பிருக்கும். கொரோனா பெருந்தொற்றால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாகக் குழந்தைகளுக்குக் கல்வி வழங்குவதில் பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. இதைச் சரி செய்ய கொரோனா தடுப்பூசி செலுத்துவது முக்கியப் பங்கு வகிக்கும். வைரஸ் பெருந்தொற்றில் இருந்து வெளியே வரவும் தடுப்பூசியே சிறந்த வழி என்று எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

Related Stories: