தர்மபுரி அருகே சொத்துக்கு ஆசைப்பட்டு 2 மகன்களுடன் சேர்ந்து பெற்றோரை கழுத்தை நெரித்துக் கொன்ற தந்தை: தற்கொலை நாடகமாடிய 3 பேரும் கைது

தர்மபுரி:தர்மபுரி மாவட்டம், தொப்பூர், குட்டூரை சேர்ந்த தம்பதி துரைசாமி(76), கோசலை(70). இவர்களுக்கு ஒரு மகன், 3 மகள்கள். 4 பேருக்கும் திருமணமாகி விட்டது. தனியாக வசித்து வந்த துரைசாமியும், கோசலையும் நேற்று முன்தினம் வீட்டுக்குள் இறந்து கிடந்தனர். அருகில் பூச்சி மருந்து பாட்டில் இருந்தது.இதுகுறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.  இதனிடையே, பிரேத பரிசோதனை அறிக்கையில், தம்பதி இருவரும் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, கொலை வழக்காக மாற்றி விசாரித்தனர். இதில், துரைசாமிக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலத்தில் ஏழரை ஏக்கரை, மகன்ஆனந்தன் பெயருக்கு எழுதித் தந்ததும், மீதமுள்ள நிலத்தில் பங்கு கேட்டு மகள்கள் தகராறு செய்ததும், அதையும் தனக்கே தர வேண்டும் என ஆனந்தன் கட்டாயப்படுத்தியதும் தெரியவந்தது.

இதையடுத்து, போலீசார் ஆனந்தன்(55), அவரது மகன்கள் சக்திவேல்(33), மோகன்குமார்(24) ஆகியோரை பிடித்து விசாரித்தனர். அதில், சகோதரிகளுக்கு சொத்தை கொடுத்துவிடுவார்களோ என்று நினைத்து கடந்த 21ம் தேதி இரவு தூங்கி கொண்டிருந்த துரைசாமி, கோசலை ஆகியோரை மூவரும் சேர்ந்து கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, விஷம் குடித்து இறந்ததாக காட்ட வாயில் சிறிது விஷத்தையும் ஊற்றி, காலி பாட்டிலை அருகே போட்டு விட்டு சென்றதாகவும், மறுநாள் பெற்றோர் தற்கொலை செய்துகொண்டதாக ஆனந்தன் நாடகமாடியதும் தெரியவந்தது. இதையடுத்து தந்தை, 2 மகன்கனை போலீசார் கைது செய்தனர்.

Related Stories: