புதுடெல்லி: தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரும், தேர்தல் வியூக ஆலோசகர் பிரசாந்த் கிஷோரும் 3வது முறையாக நேற்றும் சந்தித்து பேசினர். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், தேர்தல் வியூக ஆலோசகர் பிரசாந்த் கிஷோரை கடந்த 11ம் தேதி மும்பையில் உள்ள தனது இல்லத்துக்கு அழைத்து முதல் முறையாக பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர், கடந்த 21ம் தேதி அவர்கள் 2வது முறையாக ஆலோசனை நடத்தினார். இதனால், அடுத்த மக்களவை தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் தலைமையில் பாஜ.வுக்கு எதிராக 3வது அணி அமைக்கப்படலாம் என பேச்சு எழுந்துள்ளது. இதனிடையே, நேற்று முன்தினம் டெல்லியில் உள்ள தனது இல்லத்தில், காங்கிரஸ் அல்லாத 8 முக்கிய கட்சிகளின் தலைவர்களுடன் பவார் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், பிரசாந்த் கிஷோரை நேற்று 3வது முறையாக சரத் பவார் தனது டெல்லி இல்லத்துக்கு அழைத்து ஆலோசனை நடத்தினார். காங்கிரஸ் அல்லாத அனைத்து எதிர்க்கட்சிகள் தலைவர்களை சரத் பவார் சந்தித்த மறுநாள் பிரசாந்த் கிஷோர் அவரை சந்தித்து இருப்பது அரசியல் வட்டாரத்தில் பல்வேறு ஊகங்களை எழுப்பி உள்ளது.