வாணியம்பாடியில் ஆசிரியர் வீட்டின் கதவு உடைத்து 25 சவரன், ₹10 ஆயிரம் திருட்டு-மர்மநபர்களுக்கு போலீஸ் வலை

வாணியம்பாடி : வாணியம்பாடியில் ஆசிரியர் வீட்டின் கதவு உடைத்து 25 சவரன், ₹10 ஆயிரத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி ஆசிரியர் நகர் பகுதியை சேர்ந்தவர் வசீம் அக்ரம், தனியார் பள்ளி ஆசிரியர். இவர் நேற்று முன்தினம் காலை வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் திருப்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றார். இரவு தனது மாமியார் வீட்டில் தங்கியுள்ளனர்.

இந்நிலையில், நேற்று அதிகாலை 4 மணியளவில் வசீம் அக்ரம் தனது குடும்பத்துடன் வீட்டுக்கு வந்துள்ளார். வீட்டிற்கு உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டின் அறையில் இருந்த பீரோக்கள் திறந்த நிலையில் இருந்தது. மேலும், அதிலிருந்த பொருட்கள் அனைத்தும் சிதறிக்கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். மர்மநபர்கள் வீட்டின் பின்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே வந்து பீரோவில் இருந்த 25 சவரன், மற்றும் ₹10 ஆயிரம் திருடி சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து வசீம்அக்ரம் கொடுத்த புகாரின்பேரில், வாணியம்பாடி டிஎஸ்பி பழனிசெல்வம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் வாணியம்பாடி போலீசார் வழக்குப்பதிந்து அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி பதிவு காட்சிகளை ஆய்வு செய்து, மர்மநபர்களை தேடி வருகின்றனர்.  பூட்டிய வீட்டின் பின்பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் நகை, பணத்தை திருடிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: