சிபிஎஸ்இ 12ம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண் கணக்கிட புதிய தொழில்நுட்பம்

புதுடெல்லி:  சிபிஎஸ்இ 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் நடைமுறையை சுலபமாக்க,புதிய கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த மாணவர்களுக்கு 10ம் வகுப்பு, 11ம் வகுப்பு இறுதி தேர்வு மற்றும் 12ம் வகுப்பில் பள்ளிகள் நடத்திய தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில், 30:30:40 என்ற விகிதத்தில் மதிப்பெண் வழங்கப்பட உள்ளது. இதற்கு உச்ச நீதிமன்றமும் அனுமதி அளித்துள்ளது.

இந்த தேர்வு முடிவு  அடுத்த மாதம் இறுதிக்குள் வெளியிடப்பட உள்ளது. அதற்கு மிகவும் குறுகிய காலமே இருப்பதால், மதிப்பெண் கணக்கிடுதலை அவசர கதியில் செய்தால் குளறுபடிகள் ஏற்பட வாய்ப்புள்ளது. நாடு முழுவதும் பல லட்சம் மாணவர்கள் உள்ளனர். இந்த விகிதாச்சார அடிப்படையில் மதிப்பெண்களை கணக்கிட்டு வழங்குவது அவ்வளவு எளிதான காரணமல்ல. எனவே, இந்த மதிப்பெண் கணக்கீட்டை சுலபமாக்குவதற்காக புதிய கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தை பயன்படுத்த சிபிஐஸ்இ நிர்வாகம் முடிவு செய்துள்ளது. தேர்வு முடிவை தயாரிப்பதற்கான நேரத்தை குறைக்கவும் இது உதவும் என்று சிபிஎஸ்இ நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: