அரும்பாக்கத்தில் கல்லால் அடித்து வாலிபர் கொலை: 5 நண்பர்களுக்கு வலை

அண்ணாநகர்: அரும்பாக்கத்தில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட மோதலில், ஒரு வாலிபர் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நண்பர்களை வலைவீசி தேடி வருகின்றனர். சென்னை அரும்பாக்கம், 100 அடி சாலையில் ஒரு தனியார் விடுதியில் கடந்த சில நாட்களாக 6 பேர் கொண்ட நண்பர்கள் குழு அறை எடுத்து தங்கியிருந்தனர். இந்நிலையில், நேற்று மாலை அறைக்குள் நண்பர்கள் குழு மது அருந்தினர். பின்னர் குடிபோதையில் நண்பர்களுக்குள் வாக்குவாதம் முற்றி மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவருக்கொருவர் சரமாரியாகத் தாக்கிக் கொண்டனர். இதை அறிந்ததும் அவர்களை அறையில் இருந்து விடுதி நிர்வாகம் வெளியேற்றியது.

இந்நிலையில், சாலையில் நின்றபடி 6 நண்பர்களும் குடிபோதையில் கற்களை வீசி சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதில் ஒரு வாலிபர் படுகாயம் அடைந்து, ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். இதை பார்த்ததும் மற்ற 5 நண்பர்களும் தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து தகவலறிந்ததும் அரும்பாக்கம் போலீசார் விரைந்து வந்தனர். அங்கு படுகாயம் அடைந்த வாலிபரை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு வாலிபரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இப்புகாரின்பேரில் அரும்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

முதல் கட்ட விசாரணையில், இறந்துபோன வாலிபர் பத்ரி என்பதும், இவரது பெயரில் அறை எடுத்து நண்பர்கள் தங்கியுள்ளனர். பின்னர் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் பத்ரி கற்களால் அடித்து கொல்லப்பட்டார் எனத் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, தலைமறைவான 5 நண்பர்களையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories: