தொடர்மழையால் அதிகரிக்கும் நீர்வரத்து!: பில்லூர் அணையில் இருந்து 2ம் நாளாக விநாடிக்கு 9,000 கனஅடி நீர் வெளியேற்றம்..!!

கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள பில்லூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளதால் 2ம் நாளாக விநாடிக்கு 9000 கனஅடி உபரி நீர் திறந்துவிடப்படுகிறது. தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளா மற்றும் நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் மழையினால் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 

100 அடி உயரம் கொண்ட இந்த அணை 97 அடியை எட்டியுள்ளதால் அணையின் பாதுகாப்பு கருதி விநாடிக்கு 9000 கனஅடி உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. 2வது நாளாக பவானி ஆற்றில் உபரி நீர் வெளியேற்றப்படுவதால் கரையோர மக்களுக்கு தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. 

கடந்த 3 நாட்களுக்கு முன்பு அணைக்கு வரும் நீர்வரத்து 2,667 கனஅடியாக இருந்தது. படிப்படியாக அதிகரித்து வந்த நீர்வரத்து தற்போது 10,178 கனஅடியாக குறைந்துள்ளது. இதனால் 150 உயரம் கொண்ட பவானி சாகர் அணை 100 அடியை எட்டுகிறது. அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  

Related Stories: