பிரதாப்கர்: உத்தரப்பிரதேசத்தில் கள்ளச்சாராய கும்பலால் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறிய நிலையில் பத்திரிகையாளர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்தரப்பிரதேசத்தின் பிரதாப்கர் மாவட்டத்தை சேர்ந்தவர் சுலாப் ஸ்ரீவஸ்தவா. இவர் தொலைக்காட்சியில் நிருபராக பணியாற்றி வந்தார். கள்ளச்சாராயம் விற்ற கும்பல் குறித்து ஸ்ரீவஸ்தவா செய்தி வெளியிட்டுள்ளார். இதன் காரணமாக தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி காவல்துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை பணிமுடித்து வீடு திரும்பிய அவர் சாலை ஓரத்தில் பலத்த காயங்களுடன் விழுந்து கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.