வீட்டினுள் நுழைந்தவர்களை கண்டித்ததால் துணை நடிகை மீது தாக்குதல்: போலீசில் புகார்

பூந்தமல்லி: வளசரவாக்கத்தில் சுவர் ஏறி குதித்து வீட்டினுள் நுழைந்ததை தட்டிக்கேட்டதால் துணை நடிகையை தாக்கிய வாலிபர்கள் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. வளசரவாக்கம், ஸ்ரீதேவி குப்பம் மெயின் ரோடு, ராதா அவென்யூ பகுதியை சேர்ந்தவர் பாண்டி லட்சுமி (48). இவர், ஒரு குப்பையின் கதை படத்தில் கதாநாயகனுக்கு அம்மாவாக நடித்திருந்தார். மேலும் பல்வேறு திரைப்படங்கள் மற்றும் டிவி தொடர்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். இவரது வீட்டின் எதிரே உள்ள ஒரு வீட்டின் மதில்சுவர் அருகே சிலர் பைக்குகளை நிறுத்திவிட்டு, சுவர் ஏறி குதித்து வீட்டினுள் நுழைந்துள்ளனர்.

இதை பார்த்த பாண்டிலட்சுமி மற்றும் அவரது மகன், அந்த நபர்களிடம் கேட்டபோது அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டது. இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், வீடு புகுந்து தன்னையும், தனது மகனையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து சென்றதாக அந்த வாலிபர்கள் மீது பாண்டிலட்சுமி வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் குறித்த காட்சிகள் அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளையும் கொண்டு போலீசார் விசாரணை செய்கின்றனர்.

Related Stories: