மனைவியை தற்கொலைக்கு தூண்டிய திரைப்பட நடிகர் கைது

சென்னை: விருகம்பாக்கம் சுப்பிரமணி தெருவை சேர்ந்தவர் தங்கதுரை (43). திரைப்படங்களில் துணை நடிகராக உள்ளார். சினிமா துறையில் இருப்பதால் தங்கதுரைக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் தங்கதுரைக்கும், அவரது மனைவி ஜெயலட்சுமிக்கும்  இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை கணவன் மனைவி இடையே இது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த ஜெயலட்சுமி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த விருகம்பாக்கம் போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இதனிடையே, ஜெயலட்சுமியின் செல்போனை ஆய்வு செய்தபோது, அவர் இறப்பதற்கு முன்பு வாட்ஸ்அப் மூலம் தனது பெற்றோருக்கு ஆடியோ ஒன்று அனுப்பி உள்ளார். அதில், ‘எனது கணவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருக்கிறது. இதை நான் தட்டிக்கேட்டபோது, அந்த பெண்கள் மூலம் எனக்கு பணம் கிடைக்கிறது. உன்னால் எனக்கு செலவு மட்டும் தான். எனவே நீ செத்து போய்விடு என்று அடித்து உதைத்தார். இதனால், நான் தற்கொலை செய்து கொள்கிறேன்’ என்று பதிவு செய்துள்ளார். இதுகுறித்து ஜெயலட்சுமியின் சிறிய தந்தை விரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் துணை நடிகர் தங்கதுரை தனது மனைவியை தற்கொலைக்கு தூண்டியது தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.

Related Stories: