நியூட்ரினோ திட்டத்துக்கு வழங்கிய வனத்துறை சான்றை திரும்ப பெற வேண்டும்: வைகோ அறிக்கை

சென்னை: சுற்றுச்சூழலைக் கெடுக்கும் நியூட்ரினோ திட்டம் வேண்டாம். எனவே, வனத்துறை சான்றையும் திரும்ப பெற வேண்டும் என்று  மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மாநில அரசை வலியுறுத்தி உள்ளார்.  இதுகுறித்து, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை: தேனி மாவட்டம்  அம்பரப்பர் மலையில், லட்சக்கணக்கான டன் கருங்கற் பாறையை வெட்டி எடுத்து குகை  குடைந்து, அங்கே நியூட்ரினோ துகள்கள் குறித்து ஆராய்ச்சி செய்வதற்காக ஆராய்ச்சி மையம் அமைக்கும் முயற்சியில், கடந்த 2010ம் ஆண்டில் இருந்து ஒன்றிய அரசு தீவிரம் காட்டி வருகின்றது.  இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால், மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் அதைச் சுற்றியுள்ள அணைகளின் பாதுகாப்பு கேள்விக் குறி ஆகும்.  தமிழகத்தின் நீர் ஆதாரமாகத் திகழ்கின்ற மேற்குத் தொடர்ச்சி மலைக்குக் கேடு விளைவிக்கும் இந்தத் திட்டத்தை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்குத் தொடுத்தேன்.

அதற்கு அரசு தரப்பில் தடையின்மைச் சான்று வாங்கவில்லை என பதில் மனுதாக்கல் செய்து இருந்தனர்.  ஆகவே,  நீதிமன்றம் தடை ஆணை  வழங்கி உள்ளது. எனவே, காட்டு உயிர்களுக்குக் கேடு இல்லை என, மாநில அரசிடம் சான்று கோரி இருக்கின்ற விண்ணப்பத்தை, தமிழக அரசு ஏற்கக் கூடாது. ஏற்கெனவே வழங்கப்பட்ட வனத்துறை சான்றையும் திரும்பப் பெற வேண்டும். மேலும், சுற்றுச்சூழல் சான்றுக்குத் தடை விதிக்கும் தீர்ப்பைப் பெறவும், தமிழக அரசு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

Related Stories: