சென்னை: சுற்றுச்சூழலைக் கெடுக்கும் நியூட்ரினோ திட்டம் வேண்டாம். எனவே, வனத்துறை சான்றையும் திரும்ப பெற வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மாநில அரசை வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை: தேனி மாவட்டம் அம்பரப்பர் மலையில், லட்சக்கணக்கான டன் கருங்கற் பாறையை வெட்டி எடுத்து குகை குடைந்து, அங்கே நியூட்ரினோ துகள்கள் குறித்து ஆராய்ச்சி செய்வதற்காக ஆராய்ச்சி மையம் அமைக்கும் முயற்சியில், கடந்த 2010ம் ஆண்டில் இருந்து ஒன்றிய அரசு தீவிரம் காட்டி வருகின்றது. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால், மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் அதைச் சுற்றியுள்ள அணைகளின் பாதுகாப்பு கேள்விக் குறி ஆகும். தமிழகத்தின் நீர் ஆதாரமாகத் திகழ்கின்ற மேற்குத் தொடர்ச்சி மலைக்குக் கேடு விளைவிக்கும் இந்தத் திட்டத்தை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்குத் தொடுத்தேன்.