மாமல்லபுரம்: மாமல்லபுரம் இ.சி.ஆர்., சாலையில் முழு ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்காமல் சென்ற வாகனங்களை தடுத்து நிறுத்தி செங்கல்பட்டு ஆர்.டி.ஓ. அபராதம் விதித்து கடுமையாக எச்சரித்து அனுப்பினார். தமிழகத்தில் கொரோனா 2வது அலை அதிகமாக பரவியதையடுத்து தமிழக அரசு தளர்வுகள் இன்றி முழு ஊரடங்கினை அமல்படுத்தியது. இதையடுத்து திருமணம், நிச்சயதார்த்தம், துக்க நிகழ்வுகள் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளுக்கு செல்பவர்கள் கண்டிப்பாக இ-பாஸ் பெற்றுதான் வாகனங்களில் பயணிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை பின்பற்றாமல் சென்றால் அபராதம் விதித்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இ.சி.ஆர், ஓ.எம்.ஆர் சாலை மற்றும் திருக்கழுக்குன்றம் செல்லும் சாலைகளில் ஏராளமான வாகனங்கள் இ-பாஸ் இல்லாமல் சென்று வருகின்றன. இதனை தடுத்து நிறுத்த மாமல்லபுரம் போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்காகாதது வேதனையளிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.