சென்னை: ஜூன் மாத பொது விநியோகத் திட்டம், பாதுகாப்புடன் சுழற்சி முறையில் மேற்கொள்ள நாள் ஒன்றுக்கு 200 குடும்ப அட்டைகளுக்கு டோக்கன் வழங்கி பொருட்கள் விநியோகம் செய்யப்படும். அதற்காக இன்று முதல் 4 நாட்களுக்கு வீடுகளுக்கே சென்று டோக்கன் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் கொரோனா பரவலை தடுக்கும் வண்ணம், ஏற்கனவே முந்தைய மாதங்களில் கடைபிடித்தது போலவே ஜூன் மாத பொது விநியோகத் திட்ட செயல்பாட்டினையும் பாதுகாப்புடன் சுழற்சி முறையில் மேற்கொள்ள நாள் ஒன்றுக்கு 200 குடும்ப அட்டைகளுக்கு மிகா வண்ணம் டோக்கன்கள் வழங்கி விநியோகத்தை பாதுகாப்புடன் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று முதல் 4ம் தேதி முடிய 4 தினங்களுக்கு நியாயவிலைக் கடைப்பணியாளர்கள் குடும்ப அட்டைதாரர்களின் இல்லங்களுக்கு சென்று அவர்தம் பொருட்கள் பெறுவதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நாள் மற்றும் நேரம் குறிக்கப்பட்டுள்ள டோக்கன்களை விநியோகம் செய்வார்கள்.