சென்னை: பலத்த மழையால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு நிவாரணம் அறிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். குமரி மாவட்டத்தில் கனமழையால் சேதமடைந்த வீடுகளுக்கு தலா ரூ.5000 நிவாரணம் அளிக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். முழுமையான சேதமான கூரை வீடுக்கு தலா ரூ.5000, பகுதியாக சேதமான கூரை வீடுக்கு தலா ரூ.4100 நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
யாஸ் புயல் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வந்தது. இந்த மாவட்டத்தில் கனமழை காரணமாக தாமிரபரணி ஆறு உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த நிலையில் 370 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்ட வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் இதற்கான நிவாரணம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவி வரும் இந்த சூழ்நிலையில் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
நெல் உள்ளிட்ட பயிர்களுக்கு இடுபொருள் நிவாரண தொகையாக ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.20,000 வழங்கப்படும். அனைத்து மானாவாரி பயிர்களுக்கும் இடுபொருள் நிவாரண தொகையாக ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.10,000 வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.