பிரயாக்ராஜின் கங்கை கரையில் சடலங்கள் புதைக்கப்பட்டதன் அடையாளம் அழிப்பதில் தீவிரம்: யோகி அரசின் யோக்கியதை

பிரயாக்ராஜ்:உத்தரப்பிரதேசம், குஜராத், மத்தியபிரதேசம், பீகார் போன்ற பாஜ மற்றும் அதன் கூட்டணி அரசுகள் ஆளும் மாநிலங்களில் கொரோனா பலி எண்ணிக்கை பெருமளவில் மறைக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இறப்பு சான்றிதழ் வழங்குவதற்கும், அரசு காட்டும் கொரோனா பலி எண்ணிக்கைக்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருப்பது சர்ச்சையானது. இதுமட்டுமின்றி, கங்கையில் சடலங்கள் வீசப்பட்டது மட்டுமின்றி, கங்கை கரையில் சடலங்கள் புதைக்கப்பட்ட விவகாரம் சர்வதேச அளவில் விவாதத்தை ஏற்படுத்தியது.

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜின் கங்கை கரையில் சுமார் 2000 சடலங்கள் புகைப்பட்டிருக்கும் படங்கள் சர்வதேச பத்திரிகைகளில் இடம் பெற்று, பலரையும் பதைபதைக்க வைத்தது. கொரோனாவுக்கு தகுந்த சிகிச்சை கிடைக்காமல் இறந்த பிறகும் அவர்களுக்கான இறுதி சடங்குகள் கண்ணியமாக செய்ய வழியில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இது உத்தரப்பிரதேசத்தை ஆளும் முதல்வர் யோகிக்கும் கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது. இந்நிலையில், கங்கையில் யாரும் சடலங்களை போடாதவாறு டிரோன் கேமிரா கண்காணிப்பு என நடவடிக்கையை தீவிரப்படுத்திய யோகி அரசு அடுத்தகட்டமாக, கங்கை கரையில் புதைக்கப்பட்ட சடலங்களின் அடையாளங்களை மறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. கங்கை கரையில் சடலங்களை புதைத்தவர்கள், அதன் மண் மேடு மீது காவி நிற சேலை அல்லது போர்வையை போர்த்தி, சிறிய மூங்கில் குச்சிகளை நடுவது வழக்கம்.

இந்த காவி துணிகள் மழையில் நனைந்து மணல் பரப்பில் சடலங்கள் இருக்கும் இடங்களை பளிச்சென அடையாளம் காட்டின. எனவே, சடலங்கள் புதைக்கப்பட்ட இடங்களில் இருக்கும் துணி மற்றும் மூங்கில் குச்சிகளை அகற்றும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.அவர்கள் துணிகளை நீக்கி மண்மேடுகளை மட்டப்படுத்தியும் வருகின்றனர். இதன் மூலம் கங்கை கரையில் சடலங்கள் புதைத்தற்கான அடையாளங்கள் மறைக்கப்படுகின்றன. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. சுகாதார வசதிகளை மேம்படுத்தி உயிரிழப்புகளை தடுப்பதில் அக்கறை காட்டாத யோகி அரசு, சடலங்களின் அடையாளத்தை மறைக்க விரைந்து நடவடிக்கை எடுப்பது வெட்கக் கேடானது என சமூக வலைதளங்களில் பலர் கருத்து தெரிவிக்கின்றனர்.

Related Stories: