வேகமெடுக்கும் கொரோனா!: டெல்லி குருத்வாராவில் 300 படுக்கைகளுடன் கூடிய பிரம்மாண்ட கொரோனா சிகிச்சை மையம் உருவாக்கம்..!!

டெல்லி: டெல்லியில் உள்ள சீக்கியர்களின் குருத்வாரா 300 படுக்கைகளுடன் கூடிய பிரம்மாண்டமான கொரோனா சிகிச்சை மையமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. டெல்லியில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் கடுமையாக அதிகரித்து வருகிறது. இதனால் ஏராளமானோர் மருத்துவமனைகளில் படுக்கைகள் கிடைக்காமல் தவிக்கும் நிலை நீடித்து வருகிறது. இந்நிலையில் டெல்லியில் உள்ள ராகாப்கான்ச் குருத்வாராவில் பிரம்மாண்டமான கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது. 

இங்கு 300 படுக்கைகள், ஆக்சிஜன் செறிவூட்டிகள், தேவையான மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் என அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. நட்சத்திர விடுதி போல உருவாக்கப்பட்டிருக்கும் இந்த சிகிச்சை மையம், இன்று பிற்பகல் 2 மணி முதல் நடைமுறைக்கு வருவதாகவும் இதற்காக நடிகர் அமிதாப் பச்சன் 2 கோடி ரூபாய் நிதி வழங்கி உதவியதாகவும் குருத்வாரா நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. 

இதனிடையே டெல்லியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் முழு ஊரடங்கை அம்மாநில அரசு மேலும் 1 வாரத்திற்கு நீட்டித்திருக்கிறது. இம்முறை மெட்ரோ ரயில் சேவைக்கு அனுமதி இல்லை என்றும் பொது இடங்களிலோ, மண்டபங்களிலோ திருமண நிகழ்ச்சிகளுக்கு அனுமதி இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories: