புதுடெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடிக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: தடுப்பூசி வழங்குவதில் உங்களது அரசிடம் தெளிவும், ஒருங்கிணைப்பும் இல்லை. கொரோனாவின் முதல் அலையை இந்தியா வெற்றிகொண்டுவிட்டது என்று அவசரமாக பிரகடனம் செய்து கர்வமடைந்தீர்கள். இதுபோன்ற அரசின் தவறுகளால் இன்று இந்தியா அபாய கட்டத்தில் உள்ளது. கொரோனா பரவலின் வேகம் மிகவும் தீவிரமடைந்து வருகிறது. கொரோனாவை கையாண்டு அரசு தோல்வியடைந்துள்ளதால் மற்றொரு தேசிய ஊரடங்கு தவிர்க்க முடியாததாகிவிட்டது. கடந்த ஆண்டு ஊரடங்கால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளானார்கள். எனவே, மக்களின் மீது கருணை கொண்டு ஏழை குடும்பங்களுக்கு தலா ₹6 ஆயிரம் நிதி உதவியையும், தேவையான உணவு பொருட்களையும் வழங்க வேண்டும். ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் தடுப்பூசி வழங்குவதை விரைவு படுத்துவதுடன், மாறி வரும் கொரோனா வைரஸை கண்காணிக்கவும் வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.