கோவில்பட்டி தொகுதியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடர்ந்து முன்னிலை: டிடிவி பின்னடைவு

கோவில்பட்டி: கோவில்பட்டி தொகுதியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை விட 1,578 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தொகுதியில் அ.ம.மு.க. சார்பில் அதன் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனும், அ.தி.மு.க. சார்பில் அமைச்சர் கடம்பூர் ராஜூம், தி.மு.க. கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த சீனிவாசனும் போட்டியிட்டனர். தொடர்ந்து வாக்கு எந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டது.அதில் முதல் சுற்றின் முடிவில் அமைச்சர் கடம்பூர் ராஜூ2,607 ஓட்டுகள் பெற்று முன்னிலையில் இருந்தார். டி.டி.வி. தினகரனுக்கு 2,183 ஓட்டுகள் கிடைத்து இருந்தது.

இதன் மூலம் டி.டி.வி. தினகரனை விட சுமார் 424 வாக்குகள் அதிகம் பெற்று அமைச்சர் கடம்பூர் ராஜூ முன்னிலையில் உள்ளார். கம்யூனிஸ்டு வேட்பாளர் சீனிவாசனுக்கு 1,485 ஓட்டுகளும், நாம் தமிழர் வேட்பாளர் கோமதிக்கு 359 வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் கதிரவனுக்கு 92 வாக்குகளும் கிடைத்து இருந்தது.  2-வது சுற்று முடிவில் அமைச்சர் கடம்பூர் ராஜூ 1,888 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றார். 3-வது சுற்று முடிவில் அமைச்சர் கடம்பூர் ராஜூ 1,513 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றார். 5-வது சுற்று முடிவில் அமைச்சர் கடம்பூர் ராஜூக்கும் டி.டி.வி. தினகரனுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. அந்த சுற்றின் முடிவில் 19 வாக்குகள் மட்டுமே அமைச்சர் கூடுதலாக பெற்றிருந்தார். 7-வது சுற்று முடிவில் அமைச்சர் கடம்பூர் ராஜூ 1,578 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றார்.

Related Stories: