கொரோனாவால் மறித்தது மனிதநேயம் நடுரோட்டில் உதவியின்றி துடிதுடித்து இறந்த பெண்: செல்போனில் வீடியோ எடுத்த மக்கள்

பெங்களூரு: கொரோனா தொற்று அச்சம் காரணமாக யாரும் உதவிக்கு வராததால் பெண் ஒருவர் சாலையில் துடிதுடித்து உயிரிழந்த  சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது. கோலார் மாவட்டம், முல்பாகல் தாலுகா, சங்கண்டஹள்ளி கிராமத்தை சேர்ந்த கங்கம்மா (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). 50 வயதான இவர்,  சில நாட்களாக காய்ச்சல், மூச்சு திணறல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். நேற்று காலை மருத்துவமனைக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து  புறப்பட்டார். அப்போது, சாலையில் திடீரென மயங்கி விழுந்தார். அவருக்கு முதலுதவி செய்ய குடும்பத்தினர் மட்டுமல்ல கிராமத்தினர் கூட  யாரும் முன் வரவில்லை. கொரோனா தொற்று பாதித்திருக்கும் என்பதால் உதவ வராமல் இருந்தனர். அதே நேரம், சாலையில் உயிருக்கு போராடி  கொண்டிருந்தவரை செல்ேபான் மூலம் படம் பிடித்து கொண்டிருந்தனர். இதனால், உதவி கிடைக்காமல் அப்பெண் துடித்துடித்து உயிரிழந்தார்.

இது குறித்து தாசில்தார் மஞ்சுநாத்திற்கு தகவல் கிடைத்தது.  கிராமத்திற்கு விரைந்து வந்த அவர், இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய  ஒத்துழைக்கும்படி கிராமத்தினரிடம் கேட்டும் யாரும் முன்வரவில்லை. பின் கிராம பஞ்சாயத்து மற்றும் போலீசாரின் உதவியுடன் உடலை மீட்டு  அடக்கம் செய்தார். மக்களிடம் மனிதநேயம் செத்து போய்விட்டதாக தாசில்தார் வேதனையுடன் தெரிவித்தார்.

Related Stories: