ராம்பூர்: உத்தர பிரதேசத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை இருப்பதாக புரளியை கிளப்பும் டாக்டர்கள், ஊழியர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் எச்சரித்துள்ளார். நாட்டில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் உத்தர பிரதேசமும் ஒன்று. இங்கு தினமும் பல நூறு பேர் இறந்து வருகின்றனர். இதனால், காஜியாபாத் உள்ளிட்ட இடங்களில் மயானத்தில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைகள் அனைத்தும் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. ஆக்சிஜன் பற்றாக்குறை, படுக்கை வசதி, உயிர் காக்கும் மருந்துகள போன்றவற்றுக்கு பற்றாக்குறை ஏற்பட்டு இருப்பதாக பரவலாக குற்றச்சாட்டு உள்ளது.