டெல்லி: கொரோனா தொற்று பரவலால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க இந்தியாவுக்கு 135 கோடி ரூபாய் நிதி உதவியை வழங்குவதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. கொரோனா 2வது அலையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு உதவ பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் முன்வந்துள்ளன. கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் 600க்கும் கூடுதலான முக்கிய மருத்துவ சாதனங்கள் அனுப்பி வைக்கப்படும் என இங்கிலாந்து நாட்டு தூதரகம் நேற்று அறிவித்துள்ளது. அதேபோல் கொரோனா போரில் இந்தியாவிற்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்ய அமெரிக்கா தயாராக இருப்பதாக வெள்ளைமாளிகை தெரிவித்துள்ளது. இந்நிலையில் கொரோனா நெருக்கடியால் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் இந்தியாவுக்கு, கூகுள் நிறுவனம் 135 கோடி ரூபாய் நிதியுதவி செய்ய உள்ளதாக கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை தெரிவித்தார்.