அரை சதம் விளாசினார் பிரித்வி ஐதராபாத்துக்கு 160 ரன் இலக்கு

சென்னை: டெல்லி கேபிடல்ஸ் அணியுடனான ஐபிஎல் டி20 லீக் ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 160 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. சேப்பாக்கம், எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட் செய்தது. அந்த அணியில் லலித்துக்கு பதிலாக அக்சர் இடம் பெற்றார். ஐதராபாத் அணியில் புவனேஷ்வருக்கு பதிலாக சுசித் அறிமுக வீரராக சேர்க்கப்பட்டார். பிரித்வி ஷா, தவான் இருவரும் டெல்லி இன்னிங்சை தொடங்கினர்.

கலீல் அகமது வீசிய முதல் ஓவரின் முதல் 3 பந்துகளையும் பிரித்வி பவுண்டரிக்கு விரட்டி மிரட்டினார். பிரித்வி - தவான் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 10.1 ஓவரில் 81 ரன் சேர்த்து நல்ல அடித்தளம் அமைத்தது. பிரித்வி 32 பந்தில் அரை சதத்தை பூர்த்தி செய்தார். தவான் 28 ரன் (26 பந்து, 3 பவுண்டரி) எடுத்து ரஷித் சுழலில் கிளீன் போல்டாக, பிரித்வி 53 ரன் (39 பந்து, 7 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி ரன் அவுட்டானார். இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லி அணிக்கு பின்னடைவை கொடுத்தது.

அடுத்து கேப்டன் ரிஷப் பன்ட் - ஸ்டீவன் ஸ்மித் இணைந்து 3வது விக்கெட்டுக்கு 58 ரன் சேர்த்தனர். பன்ட் 37 ரன் (27 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்), ஹெட்மயர் 1 ரன் எடுத்து சித்தார்த் கவுல் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தனர். டெல்லி கேப்பிடல்ஸ் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 159 ரன் குவித்தது. ஸ்மித் 34 ரன் (25 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்), மார்கஸ் ஸ்டாய்னிஸ் 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஐதராபாத் பந்துவீச்சில் கவுல் 2, ரஷித் 1 விக்கெட் வீழ்த்தினர். அறிமுக சுழல் ஜெகதீஷா சுசித் விக்கெட் வீழ்த்தாவிட்டாலும், 4 ஓவரில் 21 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து சிறப்பாக செயல்பட்டார். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 160 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் களமிறங்கியது.

Related Stories: