பெங்களூரு: பெங்களூருவில் கொரோனா பாதிப்பால் தினமும் 70 முதல் 100 பேர் வரை உயிரிழப்புகள் பதிவாகி வருகின்றன. சடலங்களை தகனம் செய்ய போதுமான மயானம் இல்லாததால் உடல்களை எரிக்க உறவினர்கள் 5 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்கும் சூழல் உருவாகியுள்ளது.
தென்னிந்தியாவில் அதிக கொரோனா பாதிப்பு கொண்ட நகரமாக பெங்களூரு மாறி இருக்கிறது. பெங்களூரு நகரில் மட்டும் சுமார் 1.20 லட்சம் நபர்கள் பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்கள். நேற்று ஒரே நாளில் 13,000 நபர்களுக்கு பெங்களூரு நகரில் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் 70 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். பெங்களூரு நகரை பொறுத்தவரை கொரோனா வைரஸ் தொற்றால் இறப்பு என்பது தினமும் 70 முதல் 100 பேர் இருந்து வருகின்றனர்.
பெங்களூரு நகரில் ஹெபான் என்ற பகுதியில் உள்ள மயானத்தில் சுமார் 20க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் நின்று கொண்டுள்ளன. ஒவ்வொரு ஆம்புலன்ஸிலும் இறந்தவர்களின் உடல்களை வைத்து கொண்டு உறவினர்கள் பல மணி நேரம் காத்துக்கொண்டுள்ளனர். இதே நிலை தான் பெங்களூரு நகரில் நீடித்து கொண்டிருக்கிறது. கடந்த ஒருவார காலமாக 5 மணி நேரம் முதல் 8 மணி நேரம் காத்திருந்து அவர்களின் உறவினர்களின் உடலை தகனம் செய்துவிட்டு செல்கிறார்கள். இந்த நிலைமை மாற வேண்டும் என்பது அனைவரின் எண்ணமாக உள்ளது.