திண்டிவனம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 12 வயது சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கு ஜனவரி 31ம் தேதி அரசு பள்ளியில் போலியோ சொட்டு மருந்து போடப்பட்டது. அப்போது அங்கு இருந்த செவிலியர் குழந்தை யாருடையது என விசாரித்தபோது அந்த சிறுமி என்னுடையது என தெரிவித்துள்ளார். மேலும் விசாரணையில் குழந்தையின் தாய்க்கு 12 வயது என தெரியவந்தது. இதையடுத்து கிராம செவிலியர், சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபதிக்கு தகவல் தெரிவித்தார்.
உடனடியாக அவரும் உறுப்பினர்களும் சென்று விசாரணை செய்தனர். பின்னர் குழந்தை மற்றும் தாயை மீட்டு விழுப்புரம் குழந்தைகள் நல குழுவில் ஒப்படைத்தனர். அங்கு குழந்தைகள் நலக்குழு தலைவர் சசிகுமார், உறுப்பினர் லூர்து சேவியர் ஆகியோர் விசாரணை நடத்தினர். இதில், வானூர் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுவன், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து புகாரின்படி திண்டிவனம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து சிறுவனை கைது செய்து, விழுப்புரம் இளம் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.