சித்திரை விஷு பூஜைகளுக்காக சபரிமலையில் நடை திறப்பு: தினமும் 10 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை சித்திரை விஷூ பூஜைகளுக்காக நேற்று மாலை திறக்கப்பட்டது. வரும் 14ம் ேததி விஷு கணி தரிசனம் நடைபெறுகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல, மகர விளக்கு கால பூஜைகளுக்கு அடுத்த படியாக, சித்திரை விஷு பண்டிகையின் போது நடைபெறும் பூஜைகளில் தான் அதிகப்படியான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இந்த வருட சித்திரை விஷு பண்டிகை வரும் 14ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, நேற்று மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. இன்று முதல் 18ம் தேதி வரை தினமும் உதயாஸ்தமன பூஜை, படிபூஜை மற்றும் களபாபிஷேகம் உள்பட சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

14ம் தேதி விஷு கணி தரிசனம் நடைபெறுகிறது. அன்று அதிகாலை 5 மணி முதல் 7 மணி வரை வரும் பக்தர்கள் விஷு கணி தரிசிக்கலாம். அப்போது, தந்திரி மற்றும் மேல்சாந்தி ஆகியோர் பக்தர்களுக்கு விஷு கை நீட்டமாக நாணயங்களை வழங்குவார்கள். நாளை முதல் 18ம் தேதி வரை தினமும் 10 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு. ஆன் லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். சித்திரை விஷூ பூஜைகளுக்கு பின்னர் 18ம் தேதி இரவு நடை சாத்தப்படும்.

Related Stories: