தமிழக சட்டப்பேரவை தேர்தல் இன்று (6ம்தேதி) நடைபெறுகிறது. நேற்றுமுன்தினம் இரவு 7 மணியுடன் பிரசாரம் ஓய்ந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிராக மருத்துவர்கள் நேற்றுமுன்தினம் மாலை விராலிமலை தொகுதியில் பிரசாரம் செய்தனர். அப்போது அவர்கள் பேசியதாவது: ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி மருத்துவர்கள் சென்னையில் தொடர் போராட்டங்களை நடத்தினோம். அப்போது முதல்வருடன் லண்டனுக்கு செல்லும் முன் போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கோரிக்கைகளை நிறைவேற்றுவதாகவும், பிரச்னைகளை சரிசெய்வதாகவும் உத்தரவாதம் அளித்தார். இதனால் இந்த போராட்டத்தை கைவிட்டோம்.