மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை எஸ்.ஆர்.ராஜா நேரில் ஆய்வு

தாம்பரம்: தாம்பரம் தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.ராஜா, தொகுதி முழுவதும் மக்களை நேரில் சந்தித்து, வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு பொதுமக்கள் வழியெங்கிலும் ஆரத்தி எடுத்து, மலர்தூவி பிரம்மாண்ட வரவேற்பு அளித்து வருகின்றனர்.அதன்படி நேற்று தாம்பரம் பகுதியில் நடந்து சென்று மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், ‘திமுக ஆட்சியில் 2009ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட பாதாள சாக்கடை திட்டம், அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளாக முடிக்கப்படாமல் உள்ளது. அதிமுக ஆட்சியில் இதுவரை உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் உள்ளது. தாம்பரம் நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு இருந்தால், இந்நேரம் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று இருக்கும்.

எனவே, வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு வாக்களித்து, அதிமுக அரசால் தடைபட்ட வளர்ச்சி பணிகள் அனைத்தும் துவங்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரவும், தமிழக முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்படவும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்யுங்கள்,’ என்றார். பிரசாரத்தின்போது திமுக மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த ஏராளமானோர் உடனிருந்தனர்.பின்னர், தாம்பரம் வள்ளுவர் குருகுலம் பள்ளியில் வைக்கப்பட்டுள்ள  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் சரியாக பொருத்தப்பட்டு செயல்படுகிறதா என எஸ்.ஆர்.ராஜா நேரில் சென்று ஆய்வு செய்தார்.

Related Stories: