பிரபாகர் ராஜாவுக்கு ஆதரவு தெரிவித்து திருமாவளவன் வாக்கு சேகரிப்பு

சென்னை: விருகம்பாக்கம் தொகுதி திமுக வேட்பாளர் ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா நேற்று தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், ‘மக்களின் நீண்ட நாள் பிரச்னையாக உள்ள கழிவுநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வாக கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படும். பட்டா கோரிக்கை நிறைவேற்றப்படும். உயர்நிலை மின் கம்பங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார். தொடர்ந்து, ஏ.எம்.வி.பிரபாகர் ராஜாவுக்கு ஆதரவு தெரிவித்து விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்பி நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது, அவர் பேசுகையில், ‘பிரதமர் மோடி தாராபுரத்தில் உரையாற்றும் போது 234 தொகுதியிலும் நான் நிற்கிறேன் என்று நினைத்து பணியாற்றுங்கள் என்று குறிப்பிட்டார். இதன் மூலம் திமுக கூட்டணி வெற்றி உறுதியாகி விட்டது. விருகம்பாக்கம் தொகுதியில் பிரபாகர் ராஜா எளிமையாக வெற்றிபெறுவார். மேலும் இரட்டை இலைக்கும், மாம்பழத்துக்கு போடுகிற ஓட்டு அது பாஜகவை சாரும். திமுக ஆட்சி சமூக நீதியை பாதுகாக்க அரசாக இருக்கும்’  என்றார். திமுக தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ரங்கநாதன் எம்எல்ஏ, க.தனசேகரன், பகுதி செயலாளர் கே.கண்ணன் மு.ராசா தலைமை பொதுக்குழு உறுப்பினர் உ.துரைராஜ் எஸ்.டி.தங்கராஜ், மாவட்ட துணை செயலாளர் வாசுகி, வட்ட செயலாளர்கள் பூக்கடை பழனிச்சாமி, செழியன், விசிக ஆதவன், கரிகால் வளவன் மற்றும் கூட்டணி கட்சியினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: