திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று வருடாந்திர தெப்பல் உற்சவம் தொடக்கம்-தேவஸ்தான அதிகாரிகள் தகவல்

திருமலை:  ஏழுமலையான் கோயிலில் இன்று வருடாந்திர தெப்பல் உற்சவம் நடைபெறுகிறது என்று திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாத ஏகாதசி அன்று தொடங்கக்கூடிய வருடாந்திர தெப்பல் உற்சவம் பவுர்ணமியன்று நிறைவு பெறும் விதமாக நடத்தப்படும்.

அதன்படி, வருடாந்திர தெப்பல் உற்சவம் இன்று தொடங்குகிறது. வருகிற 28ம் தேதி வரை தொடர்ந்து 5 நாட்களுக்கு நடைபெற உள்ளது.  முதல் நாளான இன்று சீதா, லட்சுமணர், ஆஞ்சநேயர் சுவாமி ராமருடன் 3 சுற்றுகள் அலங்கரிக்கப்பட்ட தெப்பலில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளனர்.

2வது நாளான நாளை ருக்மணி சமேத கிருஷ்ணர் சுவாமி 3 சுற்றுகள் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளனர். கடைசி 3 நாட்களான வருகிற 26, 27, 28ம் தேதிகளில் தேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி எழுந்தருளி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளனர். 3வது நாள் 3 சுற்றுகளும், 4வது நாள் 4 சுற்றும், 5வது நாள் 7 சுற்றுகள் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் இன்றி தெப்பல் உற்சவம் நடைபெறும்.

வருடாந்திர தெப்பல் உற்சவத்தையொட்டி, இன்று மற்றும் நாளை ஆன்லைனில் நடைபெற இருந்த  சகஸ்கர தீப அலங்கார சேவையும், 18, 19, 20ம் தேதிகளில் ஆர்ஜித பிரமோற்சவம்,  சகஸ்கர தீப அலங்கார சேவையும் தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

புராண கல்வெட்டின்படி ஏழுமலையான் கோயிலில் கி.பி. 1468ம் ஆண்டு முதல் தெப்பல் உற்சவம் நடத்தப்பட்டு வந்ததாக ஆதாரங்கள் உள்ளது. சுவாமியின் பக்தியில் பல்வேறு கீர்த்தனைகள் எழுதிய அன்னமாச்சாரியா, தெப்பல் உற்சவம் குறித்து பாடல்களையும் எழுதியுள்ளார்.

காலப்போக்கில் கைவிடப்பட்ட இந்த உற்சவத்தை திருமலை திருப்பதி தேவஸ்தானம் கடந்த 1921ம் ஆண்டு முதல் தொடங்கி ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது.  தினமும் இரவு 7 மணி முதல் 8 மணி வரை அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமி தயார் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: