டிடிவி தினகரன் போட்டியிடும் கோவில்பட்டியில் மார்க்சிஸ்ட் வேட்பாளருக்கு எழுத்தாளர்கள் ஆதரவு

சென்னை: டிடிவி தினகரன் போட்டியிடும் கோவில்பட்டி தொகுதியில் மார்க்சிஸ்ட் வேட்பாளருக்கு பொதுமக்கள் ஆதரவு தரவேண்டும் என்று புகழ் பெற்ற எழுத்தாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். எழுத்தாளர்கள் சாகித்ய அகாடமி விருது பெற்ற கி.ராஜநாராயணன், பூமணி, எஸ்.ராமகிருஷ்ணன், சோ.தர்மன், சிறுகதை நாவலாசிரியர் பா.செயப்பிரகாசம், நாவலாசிரியர் முத்தானந்தம் ஆகியோர் வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் கூறியிருப்பதாவது: இந்திய விடுதலைக்காக இன்னுயிர் ஈந்த நம் முன்னோடிகள் கனவு கண்ட ஒர் ஆரோக்கியமான சாதி, மதப் பாகுபாடுகளற்ற சமத்துவ சமூகத்தைப் படைக்க அரசியலை ஒரு மக்கள் சேவையாகக் கருதும் அரசியல் ஊழியர்கள் பெரும்படையாக புறப்பட வேண்டும்.

அப்படிப்பட்ட தன்னலமற்ற மக்கள் சேவகரான கே.சீனிவாசன், கோவில்பட்டி தொகுதியில் நிறுத்தப்பட்டிருப்பதை கரிசல் எழுத்தாளர்களாகிய நாங்கள் வரவேற்கிறோம். கரிசல் வாழ்க்கையுடனும், கரிசல் இலக்கியத்துடனும் முழுமையாகத் தன்னைக் கரைத்துக் கொண்டுள்ள மக்கள் சேவகர் சீனிவாசனை ஆதரப்பதும், வெற்றி பெறச் செய்வதும் நமது கடமை. ஆழ்ந்த இலக்கிய வாசிப்பும், கலை உணர்வும் கொண்டவர் சீனிவாசன். கோவிப்பட்டிக்கே உரிய போராட்டப் பாரம்பரியத்துக்கும், தொட்டுத் தொடரும் கலை இலக்கிய மரபுக்கும் பொருத்தமான வாரிசாகவும், தொண்டராகவும் இருப்பார். அடிப்படை அரசியல் அறத்துடன் கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேலாக கோவில்பட்டி பகுதியில் மக்கள் பணியாற்றும் சீனிவாசனுக்கு, பணத்தையும், சாதியத்தையும் தாண்டி அரசியலாகச் சந்தித்து வாக்களித்து வெற்றி பெற வைக்க வேண்டும்.

Related Stories: