சென்னை-கொல்லம் ரயிலில் 1.22 கோடி சிக்கியது: ரயில்வே போலீசார் அதிரடி

செங்கோட்டை: கேரளாவில் சட்டமன்ற தேர்தல் வரும் எப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து கேரள - தமிழ்நாடு எல்லை ஆரியங்காவு பகுதியில் கேரள போலீசார் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தி வருகின்றனர். தற்போது ரயில்வே போலீசாரும் ரயில்களில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று செங்கோட்டை ரயில்வே போலீசார், தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு செல்லும் சென்னை - கொல்லம் விரைவு ரயிலில் தென்மலை பகுதியில் வைத்து சோதனை மேற்கொண்டனர். அப்போது மதுரையைச் சேர்ந்த 3 பேர் பேக்குகளில் கட்டுக்கட்டாக 2000 ரூபாய் நோட்டு 500 ரூபாய் நோட்டுக்கள் என ஒரு கோடியே 22 லட்ச ரூபாய் வைத்திருப்பது தெரியவந்தது. அவர்களிடம் பணம் கொண்டு செல்வதற்கான உரிய ஆவணங்கள் இல்லை.

ரயில்வே போலீசாரின் விசாரணையில், மதுரையைச் சேர்ந்த சதீஸ்குமார் (35), ராஜீவ்காந்தி (33), குண்டலிபுரத்தை சேர்ந்த தியாகராஜன் (63) என்பதும் இவர்கள் இந்த பணத்தை கேரளாவில் உள்ள செங்கனூர் பகுதியை சேர்ந்த நகைக்கடைக்கு கொண்டு செல்வதாகவும் தெரிவித்தனர். பணத்தை பறிமுதல் செய்த ரயில்வே போலீசார், வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

Related Stories: