நோயாளிகளை டாக்டர்கள் தொடாமலே ‘ஸ்மார்ட் நாற்காலி’ மூலம் சிகிச்சை: திருச்சி கல்லூரி மாணவன் அசத்தல்

ஒவ்வொரு கண்டுபிடிப்புகளுக்கு பின்னணியிலும் ஏதாவது ஒரு தாக்கம் இருக்கும். அதாவது அறிவியல் தொழிற்நுட்ப வளர்ச்சி காரணமாக தினமும் புதுப்புது கண்டுபிடிப்புகள் வந்துகொண்டே தான் இருக்கின்றன. மனிதனின் ஆராய்ச்சிக்கு என்றுமே எல்லை இல்லை என்பதை நாம் ஒவ்வொரு நாளும் கண்டுணர்ந்து வருகிறோம். அந்த கண்டுபிடிப்புகள் பலகோடி மக்களுக்கு இன்றியமையாததாகவும், அத்தியாவசியமானதாகவும் மாறிவிட்டது. அதில் மருத்துவத்துறை இன்று வியத்தகு வளர்ச்சியை கண்டுள்ளது. அனைத்து நோய்களுக்கும் தடுப்பூசி, நவீன சிகிச்சை என்று மாறிக்கொண்டே இருக்கிறது. காலத்திற்கு தகுந்தாற்போல் கண்டுபிடிப்புகளும் புதுவடிவில் ஆச்சர்யப்படத்தக்க வகையில் வெளி வருகிறது. கடந்த 2 வருடங்களுக்கு முன் கொரோனா நோய் தொற்று உலகையே உலுக்கி பலரை காவு வாங்கியது. உடனடியாக அதற்கான தடுப்பு மருந்து என்பது கண்டுபிடிக்கப்பட்டாலும், ஒருவருக்கொருவர் சமூக இடைவெளியில் தான் இருக்க வேண்டும் என்ற விதிமுறை இருந்தது. அதே நேரத்தில் ஒரு நோயாளியை மருத்துவர்கள், செவிலியர்கள் அருகில் சென்று  சோதனை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர். அதனால் பல மருத்துவர்கள் தொற்று பரவி உயிரிழந்தனர். தொற்று நோயின் வீரியம் அதிகமானதால் லாக்டவுன் அறிவிக்கப்பட்டு வீட்டிற்குள் முடங்க வேண்டிய நிலையும் ஏற்பட்டது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் பயனுள்ள விதத்தில் ஒரு கண்டுபிடிப்பை இந்த சமூகத்திற்கு அளிக்க வேண்டும் என்பதற்காக, திருச்சி கல்லூரி மாணவன் ஒருவர் முயற்சி செய்து அதில் சாதனையும் படைத்துள்ளார். திருச்சி புனித வளனார் கல்லூரியில் முதுகலை மின்னணுவியல் முதலாம் ஆண்டு படித்து வரும் மாணவர் சுபாஷ் (21). ஸ்மார்ட் நாற்காலியை கண்டுபிடித்துள்ளார். அது என்ன என்று கேட்கிறீர்களா..? கொரோனா தொற்று அதிகமாக பரவிய காலகட்டத்தில், தொற்று தாக்கிய நோயாளிகளை டாக்டர்கள் அருகில் சென்று தொட்டு சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை இருந்தது. அப்போது டாக்டர்கள், சமூக இடைவெளியை கடைபிடித்து, முகக்கவசம், கையுறை, நவீன தற்காப்பு உடைகளை அணிந்து கொண்டு பரிசோதனை செய்தனர். அந்த சமயத்தில் தொற்று வீரியம் காரணமாக சிகிச்சை அளித்த டாக்டர்களையும் தாக்கியது. இதில் நாடு முழுவதும் டாக்டர்கள், செவிலியர்கள் என பலர் உயிரிழக்க நேரிட்டது. நோயாளிகளை காப்பாற்ற வேண்டிய மருத்துவர்களே, தொற்றுக்கு பலியானதால் சற்று பின்னடைவை சந்திக்க நேரிட்டது. இதன்பிறகே தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு போடப்பட்டது. இதனால் நோய் எதிர்ப்பு காரணமாக கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தற்போது டாக்டர்கள், நோயாளிகள் அருகில் செல்லாமல், அவர்களது ரத்த ஓட்டம், இதய துடிப்பு, உடல் வெப்ப நிலையை பரிசோதிக்கும் வகையில் ‘அதிசய’ ஸ்மார்ட் நாற்காலியை மாணவர் சுபாஷ், கண்டுபிடித்து அசத்தியுள்ளார். இதுகுறித்து மாணவர் சுபாஷ் கூறுகையில், எனது தந்ைத நெடுமாறன் கூலி வேலை செய்கிறார். தாய் வசந்தா. அங்கன்வாடியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். எனது பள்ளிப்படிப்பை பெரம்பலூரில் உள்ள  அரசு உதவிபெறும் தனியார் பள்ளியில் முடித்துவிட்டு, இளங்கலை மின்னணுவியல் படிப்பை புனித வளனார் கல்லூரியில் முடித்தேன். இளங்கலை 3ம் ஆண்டு பயிலும் போது தான், கொரோனா லாக் டவுன் போடப்பட்டது. எனவே அந்த சமயத்தில் மருத்துவர்கள் கொரோனா நோயாளிகளை பரிசோதனை செய்ய வேண்டும் என்றால், சற்று இடைவெளிவிட்டு, அவர்களை தொடாமல் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் பெரும்பாலும் நோயாளிகளுக்கு முதலில் அவர்கள் பரிசோதிப்பது, ரத்த ஓட்டம் சீராக உள்ளதா, இதயதுடிப்பு சீராக உள்ளதா, உடல் வெப்ப நிலை சரியாக உள்ளதா என்ற இந்த 3 பரிசோதனைகள் மிகவும் பொதுவானதாக மாறியதால்,  அந்த மருத்துவர்களின் கஷ்டமான சூழ்நிலையை அருகில் இருந்து பார்த்தேன். எனவே வைபை மூலம் மருத்துவர்களின் செல்போன்களில் ஒரு நோயாளியின் ரத்த ஓட்டம், இதயதுடிப்பு, வெப்பநிலை உள்ளிட்டவைகளை அறிந்துகொள்ளும்படி ஒரு புதிய கண்டுபிடிப்பை உருவாக்க திட்டமிட்டேன். அதன் விளைவாக தான் இந்த ஐஓடி அடிப்படையிலான ‘ஸ்மார்ட் நாற்காலியை’ உருவாக்கினேன். அதனை முதலில் எங்கள் கல்லூரிக்கு அறிமுகப்படுத்தினேன். கடந்த ஆண்டு ‘இன்னொவேஷன் 2022’ என்ற மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில் பங்கேற்று இரண்டாம் இடத்தை பிடித்தேன். பின்னர் ஒன்றிய அரசின் விக்யான் சர்வத்ரா புஜ்யாத்தின் தேசிய அறிவியல் வார போட்டியில் பங்கேற்றபோது எனது கண்டுபிடிப்பை அங்கீகரித்தனர் என்றார். மனித சமுதாயத்துக்கு பயனுள்ளதாக இருக்கும் வகையில் மாணவர் சுபாஷ் கண்டுபிடித்த ‘ஸ்மார்ட் நாற்காலி’யை இன்று பலரும் ஆச்சர்யப்பட்டு அதிசயித்து பாராட்டி வருகின்றனர். தாராளமாக.. மாணவன் சுபாஷ்க்கு ஒரு ‘சபாஷ்’ போடலாம்….

The post நோயாளிகளை டாக்டர்கள் தொடாமலே ‘ஸ்மார்ட் நாற்காலி’ மூலம் சிகிச்சை: திருச்சி கல்லூரி மாணவன் அசத்தல் appeared first on Dinakaran.

Related Stories: