சென்னை: துபாயிலிருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் சிறப்பு விமானம் நேற்று காலை சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. அந்த விமானம் மீண்டும் உள்நாட்டு விமானமாக டில்லி புறப்பட்டு செல்ல தயாரானது. அதற்கு முன்பாக அந்த விமானத்தை சுத்தப்படுத்தும் பணியில் விமான ஊழியர்கள் ஈடுப்பட்டனர். அப்போது விமானத்தின் ஒரு சீட்டிற்கு அடியில் வைக்கப்பட்டிருந்த லைப் சேப்டி ஜாக்கெட் கலைந்து கிடந்தது. ஊழியர்கள் அதை எடுத்து சரியாக வைக்க முயன்றபோது, அதலிருந்து குளியல் சோப்பு கட்டி கீழே விழுந்தது. அதை எடுத்து பார்த்தபோது, அதனுள் தங்கக்கட்டி மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து விமான ஊழியர்கள், விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து சோப்பு கட்டியை கைப்பற்றினர்.