திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். இந்த தொகுதியின் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட கே.சி.வீரமணி, அமைச்சராக உள்ளார்.ஜோலார்பேட்டை தொகுதியில் உள்ள நாட்றம்பள்ளி, கந்திலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தேர்தல் விதிகளை மீறி பெண்களை கவரும் வகையில் இரவில் வீடு வீடாக சேலைகள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறதாம். இந்த சேலைகள் முதல்வர் மற்றும் அமைச்சர் உருவப்படம் பொறித்த கைப்பைகளில் வழங்கி வருகின்றனர்.
அவ்வாறு வழங்குபவர்கள் பெண்களிடம், அமைச்சர் கே.சி.வீரமணிக்கு வாக்களிக்க வேண்டும் என்று கூறி செல்கிறார்களாம். இதனை அறிந்த திமுக மற்றும் எதிர்க்கட்சியினர் தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.திருப்பத்தூர் மாவட்டத்தில் அதிமுக அமைச்சருக்கு துணை போகின்ற வகையில் தேர்தல் அதிகாரிகள் செயல்படுகின்றனர். எனவே, தேர்தல் நியாயமாக நடக்க அவர்கள் மீது தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி உள்ளனர்.